நாட்டின் விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் திட்டங்களை ஆராய நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
விளையாட்டு, கல்வி அமைச்சர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்களிப்புடன் மேற்படி குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டுக்கழகத்தை பார்வையிடுவதற்காக இன்று (25) மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அனைத்து விளையாட்டு துறைகளிலும் இருந்து 100 பெண் வீராங்கனைகளை தெரிவு செய்து அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பயிற்சிகளை வழங்குமாறு ஜனாதிபதி விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
ஒவ்வொரு வருடமும் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சர்வதேச போட்டிகளில் வெற்றிபெறக்கூடிய பெண் வீராங்கனைகளை சில வருடங்களில் இந்த நாட்டில் உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று, 10-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் விளையாட்டுத் திறன்களை அறிந்து அதற்கேற்ப அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகள் உட்பட நாட்டிலுள்ள 100 பாடசாலைகளில் பேஸ்பால் விளையாட்டை பிரபலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, ஆசியாவின் பிரதான பேஸ்பால் தளமாக இலங்கையை மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
பல்வேறு விளையாட்டுத் துறைகளில் தாய்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பின்னர் ஓய்வு பெறும் பெண் வீராங்கனைகளுக்கு பட்டப்படிப்பை முடிப்பதற்கான அடிப்படைத் தகைமைகளாகக் கருதி, அதற்கான வசதிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
Post a Comment